இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு நாளை (29) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் (RED CARPET) தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகும். பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற காத்திருக்கின்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொள்கின்றார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும், தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஸ்ரீபிருந்திரனும், யாழ். மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இரட்னராசா கிருஷ்ணகுமாரும், கிருபா லேனர்ஸ் உரிமையாளர் அழகசுந்தரம் கிருபாகரனும், “கனடா தமிழ் பசங்க” வின் தயாரிப்பு முகாமையாளர் (இலங்கை) வீணா AE உம், ஏ.ஆர்.சி. மொபைல் சார்பாக சிவசாமி கஜனும் கலந்து கொள்கின்றார்கள்.
கௌரவ விருந்தினர்களாக இசைவாணர் கண்ணன், ஒளிப்பதிவாளர் கே.கமலதாசன் மற்றும் சினிமா செயற்பாட்டாளர் மணிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
குறும்படங்கள் மற்றும் காணொளிப்பாடல்களுக்காக வழங்கப்படவுள்ள இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான படைப்புக்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் விழா மேடையில் அறிவிக்கப்படவுள்ளதுடன் விருதுகளும் வழங்கிவைக்கப்படவுள்ளன.
தவிர, முதல் தடவையாக இடம்பெறவுள்ள குவியம் விருதுகள் நிகழ்வில் பல சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த 10 வருடத்திற்கும் மேலாக இந்த துறையில் இயங்கிக் கொண்டிருப்பவர்களும் பல இளம் கலைஞர்களும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.
அதுமட்டுமல்லாது இந்த துறையில் நீண்ட காலம் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த கலைஞர் ஒருவரும் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார்.
எம் கலைஞர்களை நாங்களே கொண்டாடி மகிழக்கூடிய இந்த நிகழ்வில் துறை சார்ந்தோர் மற்றும் எம் சினிமாவை ஆதரிக்கும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
No comments