உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா (வயது 58) மாரடைப்பால் காலமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். இவர், ‘சென்னை காதல்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான இவர், ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வதில் புகழ்பெற்றவர். குறிப்பாக, நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் போன்றோரின் குரலையும், அவர்களின் உடல் மேனரிசத்தையும் அப்படியே வெளிப்படுத்தும் திறமை படைத்தவர்.
சின்னத்திரை மட்டுமன்றி ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கோவையைச் சேர்ந்த இவர் கோவை குணா என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகங்கள் செயல் இழந்த நிலையில் கடந்த ஓராண்டாக கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
No comments