கொழும்பு, தேசிய வைத்தியசாலை பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரான டாக்டரைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்ட புலனாய்வுத்துறை அதிகாரிகளில் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு சம்புத்வ ஜயந்தி மாவத்தை பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இவர் காயமடைந்திருந்தார்.
இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான எஸ். அழகப்பெரும என்ற புலனாய்வுத்துறை அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
மாறுவேடம் பூண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி சுமார் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச் சென்று கொண்டிருந்த வைத்தியரை அலுவலக தேவைக்காக கொழும்புக்கு தனது பிள்ளையுடன் வந்து கொண்டிருந்த பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவும், தேசிய வைத்தியசாலை வளாகத்தில் கடமையில் இருந்த தேசிய உளவுத்துறையின் இரு உறுப்பினர்களும் துரத்திச் சென்று அவரைக் கைது செய்து பணத்தை மீட்டனர்.









No comments