டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இடைநடுவே கொரோனா வைரஸால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை முன்வைத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் சிறப்பு திட்டங்களின் இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது விளையாடும் பதினொருவர் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக குழு அனுமதி அளித்தது.
அத்துடன், எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் பந்து மீது எச்சிலை தேய்க்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கும் ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் இது அமுல்படுத்தப்படும். தடையையும் மீறி பந்தை பளபளப்பு செய்ய எச்சிலால் தேய்த்தால் இன்னிங்சில் இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்படும்.
அதன் பிறகும் தொடர்ந்து எச்சிலை பந்து மீது தேய்த்துக் கொண்டே இருந்தால் சம்பந்தப்பட்ட அணியின் பந்துவீச்சாளரை தண்டிக்கும் விதமாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டியாக வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் தற்காலிகமாக உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. விதிமுறைகளின்படி போட்டியின் நடுவே ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களமிறங்கி களத்தடுப்பு செய்வார். ஆனால், துடுப்பெடுத்தாடவோ பந்துவீசவோ அனுமதி கிடையாது. ஆனால், ரி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
சமீபத்திய விதிமுறையின்படி, டெஸ்ட் போட்டியில் பவுன்ஸர் பந்தால் எந்த ஒரு துடுப்பாட்ட வீரராவது தாக்கப்பட்டு மயக்க நிலைக்குச் சென்றால் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அணியில் இடம்பெற்று துடுப்பெடுத்தாடலாம் என அனுமதிக்கப்பட்டது.
No comments