முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கை ஒத்திவைக்க கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வௌ்ளை வேனைப் பயன்படுத்தி 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை மற்றும் அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
தொடர்ந்து வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளமையினால், வழக்கு தொடர்பில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை வழக்கை ஒத்திவைப்பது சிறந்தது என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார நீதிபதிகள் குழாமிற்கு அறிவித்தார்.
இதனை தொடர்ந்து வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
No comments