கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு எழுமாறாக 70 பேரிடம் கோரோனா தொற்றைக் கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி நாளை புதன்கிழமை நாச்சிக்குடா பகுதியிலும் மறுநாள் வியாழக்கிழமை கிளிநொச்சி நகரிலும் வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பளை பகுதியிலும் இந்த எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் கோரோனா தொடர்பான பீ.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி தென்பகுதிக்குச் சென்று வந்தவர்கள், பாரவூர்திச் சாரதிகள், பொலிஸார், முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போர், விடுதிகளில் தங்கியிருப்போர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 நாள்களில் 70 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான உயிரியல் மாதிரிகள் பெறப்படவுள்ளன. மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









No comments