நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு உயிரிழந்தவர்களில் 130 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதேவேளை பெரும்பாலான பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தேவாலய வளாகத்தின் வெளியே நிகழ்வுக்கு தடைவிதித்திருந்தனர்.
அதேவேளை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நிகழ்வில் கலந்து கொள்ள தடைவிதிக்க கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் முன் வைத்த கோரிக்கைக்கு நீதிமன்று தடைவிதிக்க மறுத்த நிலையில் சிவாஜிலிங்கமும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.
அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.
இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.








No comments