முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செளியன், முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகிய நால்வருக்கு எதிரான வழக்கு விசாரணைகள், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மே 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற, நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், 2018பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற அவர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.
இதேவேளை வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி வழக்கினை ஒத்திவைத்து, பின்னர் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக முன்னிலையாகி பிணையில் வெளிவந்தார்.
அதனைத்தொடர்ந்து அ.பீற்றர் இளஞ்செளியன், அ.சண்முகலிங்கம் ஆகியோரும் இந்த வழக்கில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இந்த வழக்கு விசாரணைக்குரிய குற்றப்பத்திரிக்கை இன்னும் வராத நிலையில், குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்கு தவணையிடப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.









No comments