இலங்கையின் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், எமது கடல் எல்லை பகுதிக்குள் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான பேச்சுவார்ததை நடைபெறுவதாகவும் இதுதொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்திருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்க முடியுமா? அனுமதிக்க முடியமாயின், அது எமக்கு பாதகமாக அமையும் அல்லவா? என்று ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அமைச்சர் பதிலளிக்கையில்,
அமைச்சர் என்ற வகையில் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள முடியாது. அமைச்சரவையிலேயே இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ள முடியும். இதுவரையில் அமைச்சர் இதுதொடர்பாக எந்த விடயத்தையும் அமைச்சரவையில் தெரிவிக்கவில்லை. ஆவணமும் முன்வைக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments