ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தயாரித்த 21 தீர்மானங்களுடனான சுதந்திரத்திற்காக ஒன்றிணைவோம் - பணியிடத்தை வெற்றிகொள்வோம் சர்வதேச தொழிலாளர் தின பிரேரணை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊழியர் சங்கத்தின் செயலாளர் லெஸ்லி தேவேந்திர அவர்களினால் இன்று (30) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அப்போதைய தொழில் அமைச்சராக ஏற்படுத்திய தொழிலாளர் சாசனத்தின் ஊடாக இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு செய்த பெரும் சேவையையும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த பங்களிப்பையும் தொழிற்சங்க தலைவர்கள் இதன்போது பாராட்டினர்.
அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டமை குறித்தும் இதன்போது விசேடமாக நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், காமினி லொகுகே, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, முன்னாள் அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
No comments