யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோரை யாழ்ப்பாணம் பொலிஸார் வாக்குமூலம் வழங்க அழைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் நேற்றிரவு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரதராஜா பார்த்திபனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
இருவரும் இன்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்துள்ளனர்.
இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த்து.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் நேற்றிரவு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது.
காவல் படைக்கு வழங்கப்பட்ட சீருடைகளும் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டதுடன், கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
மாநகர சபை ஆணையாளர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த காவல் படைக்கான சீருடை உள்ளிட்டவற்றை ஒழுங்கு செய்தமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் வாக்குமூலம் பெறவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்றி மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.
இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு கொழும்பு மாநகர சபை பின்பற்றிய நடைமுறைகளின் அடிப்படையிலேயே சீருடை தொடக்கம் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல்வர் இன்று விளக்கமளித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments