Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது யார் ?


மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, (i)மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் (ii)அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் (iii) சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதினதும்  அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டும் என்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்று அர்த்தப்படும். 

ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு “மன்னிப்பு” வழங்கியுள்ளார்?

அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோலவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், அதேவேளை, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் மற்றும் மணிவண்ணன் தரப்பு வாத பிரதிவாதங்களைக் கேட்டு அறிந்த பின்னரேயே மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அறிகின்றேன்.

ஆனால், மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது. 

இவ்வாறான செயல்களை பொலிஸ் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும்.

இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக? பொலிசார் மக்கள் பொலிசாரா ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments