ஆறு கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சீதுவை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
சீதுவை பேஸ்லைன் வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது சந்தேகத்திற்கு இடமான வாகனத்தினை மறித்து சோதனையிடப்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
அதில் சீதுவை பகுதியை சேர்ந்த 44 வயதான நபர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 6 கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , குறித்த நபர் பயணித்த வாகனத்தில் மேலும் இருவர் பயணித்ததாகவும் , அவர்களின் வாகனத்திலிருந்து மைக்ரோ பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments