அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை, தமது “கனவு” திட்டம் என வேறு பெயர்களைப் பாவித்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் சிலர் இறங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என பிரதமரின் இணைப்புச் செயலாளரும், வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற இணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவரது முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளதாவது,
”கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் பத்து முக்கிய அம்சங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
தேசிய கொள்கைச் சட்டகத்தின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” என்னும் தொனிப்பொருளில், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை, நட்பு- சீரமைக்கப்படாத வெளியுறவுக் கொள்கை, ஊழல் இல்லாத நிர்வாகம், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் புதிய அரசமைப்பு, உற்பத்தித் திறன்மிக்க துடிப்பான மனித வளம், மக்கள் மைய பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப அடிப்படையிலான சமூகம், இயற்பியல் வளங்களின் வளர்ச்சி, நிலையான சுற்றுச்சூழல் மேலாண்மை, ஒழுக்கம் – சட்டத்தை மதித்தல் மற்றும் மதிப்புகள் சார்ந்த சமூகம் ஆகிய பிரதான பத்து அம்சங்களுக்கான அங்கிகாரமாகவே கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பெருமளவான மக்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” என்பதை முதன்மையாகக்கொண்டே நாடு முழுவதுக்குமான அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
உலகநாடுகள் அனைத்துமே எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான நிலையிலும்கூட, தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சற்றேனும் பின்னிற்காமல், மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை எமது அரசாங்கம் துரிதமாகச் செய்துவருகிறது.
இன, மத, பிராந்திய பேதமின்றி, “இலங்கையர்” என்ற ஒரே கூரையின்கீழ் இவ்வபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை, தமது “கனவு” திட்டம் என வேறு பெயர்களைப் பாவித்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் சிலர் இறங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அரசாங்கத்தின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” தேசிய வேலைதிட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இத்திட்டத்தை எப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் தம்மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.
ஆனால், வேறு பெயரிலான திட்டங்கள்போன்று அதனை நடைமுறைப்படுத்த முடியாது. இத்திட்டங்கள் அனைத்துமே மக்களுக்காக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இடம்பெறுவனவாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் இத்திட்டங்களைத் தம்மக்களுக்காகப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டுமே தவிர, வேறு பெயரிலான திட்டங்களாக அறிவிப்பது உகந்ததல்ல.
மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் பெரிதும் மதிக்கின்றோம். அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களையும் அபிவிருத்தியையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments