மேல்மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் 37 பேர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர்ப் பட்டியலை, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அனுப்பியுள்ள பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தென்னகோன், இந்த பட்டியலை கொழும்பு எல்லை, களுத்துறை எல்லை, மேல் மாகாண தெற்கு எல்லை மற்றும் மேல் மாகாண வடக்கு எல்லைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த அதிகாரிகளில் 28 பேர் கொழும்பு எல்லைக்குட்பட்டவர்கள் மற்றும் ஆறு பேர் களுத்துறை எல்லை, இருவர் மேல் மாகாண வடக்கு எல்லை, மற்றும் ஒருவர் மேல் மாகாண தெற்கு எல்லைக்குட்பட பகுதியில் பணியாற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், வெளிப்படுத்தப்பட்டவற்றின் அடிப்படையில், அதிகாரிகளை வைத்தியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அதிகாரிகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து தங்களின் பரிந்துரைகளுடன் அறிக்கைகளை அனுப்பவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான அதிகாரிகள் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சிலர் "ஐஸ்" க்கு அடிமையாகவும் குறைந்தது இருவர் ஹெராயினுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
No comments