யாழில். நேற்றைய தினம் "13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது.
அது தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மனோகணேசன் தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு "விசித்திரமானது" என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன்.
"13ம் திருத்தம்" பற்றி வாயை திறந்தாலேயே, "இந்திய-மேற்குலக கைக்கூலி" என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது.
நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் "கைக்கூலி"..!
இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா?
13 என்பது முழுமையான தீர்வென்றோ, அதுதான் இறுதி தீர்வென்றோ எவரும் இங்கே ஒருபோதும் கருதவில்லை.
அமைச்சர் டக்ளஸ்கூட 13ஐ முழுமையான இறுதி தீர்வு என கருதுகிறார் என நான் நினைக்கவில்லை. இதையும்கூட திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா?
இதை "ஆரம்ப புள்ளி" யாக கருதிதானே மாகாணசபை தேர்தல் வந்தால் வடக்கு கிழக்கில் சகல கட்சியினரும் போட்டி இடுகிறார்கள்?
ஆக, எந்தவொரு இறுதி தீர்வும், "இதையும் தாண்டி" தானே அமைய வேண்டும்?
இதைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல், எப்படி, அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது?
இதன் அடிப்படையில்தானே, இலங்கை வரும் ஒவ்வொரு இந்திய அரசு பிரதிநிதியுடனும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆண்டாண்டு காலமாக பேசுகிறார்கள்?
அப்படியானால் இனிமேல், இத்தகைய இந்திய அரசுடனான பேச்சுகள் நிறுத்தப்பட போகின்றனவா?
மேலும் மாகாணசபை தேர்தல் பற்றிதானே ஐநா மனித உரிமை ஆணையம் உட்பட சர்வதேச நிறுவனங்களும் பேசுகின்றன?
"சமஷ்டி" உட்பட பெருந்தீர்வுகளை பெற தமிழருக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதை பயன்படுத்தி, தமிழர் தாம் போராடி தீர்வுகளை பெற வேண்டும். வெளியில் இருந்து எவரும் வந்து, தட்டில் வைத்து தரப்போகிறார்களா, என்ன? என அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments