பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் , உயிரிழந்துள்ள நிலையில் , பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதனால் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மூன்று பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம் பனாமுரே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப தகராறை அடுத்து மனைவி, பனாமுரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பனாமுரே , வெலிபோத யாய பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கணவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்திருந்தனர்.
அந்நிலையில் பொலிஸ் காவலில் இருந்த குறித்த நபர் காவல் கூண்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து பொலிஸ் நிலையம் முன்பாக கூடிய பிரதேச வாசிகள் குறித்த குடும்பஸ்தரின் மரணத்திற்கு போலீசாரே காரணம் என குற்றம் சுமத்துகின்றனர்.
No comments