கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை கிரியெல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று , அங்குள்ள அறையொன்றினுள் , அவரை நிர்வாணமாக்கி , மண்டியிட வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைத்து ஜனாதிபதிக்கு பிரபல சட்ட நிறுவனம் ஒன்று கடிதம் அனுப்பியுள்ளது.
சப்ரகமுவ மாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு சாரதி ஒருவரை வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கிய காட்சி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு , அது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சாரதியின் சட்டத்தரணிகள், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் கோருவதாக ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளனர்.
கிரியெல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட எமது கட்சிக்காரர், ஒரு அறைக்குள், நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிட கட்டாயப்படுத்தப்பட்டு, இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் சாரதியை மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கியுள்ளார்.
எமது கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, நிர்வாணமாக புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments