கிளிநொச்சியில் உயர்தர கற்பதற்கான அனுமதியை பெற ஊற்றுப்புலத்திலிருந்து வந்த மாணவிகள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவி படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண வரை கற்ற மாணவிகள் நகரில் உள்ள பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் காலை வந்துள்ளனர்.
மாணவிகள் இருவரும் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் பாடசாலை முன்பாக உள்ள பாதசாரிகள் கடவை ஊடாக கடக்க முற்பட்ட போது , பட்டா ரக வாகனம் , மற்றும்இலங்கை மின்சார சபைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓடும் கன்ரர் ரக வாகனம் என்பன மாணவிகள் வீதியை கடக்க வழி விட்டு காத்திருந்துள்ளனர்.
அதன் போது குறித்த வாகனங்களுக்கு பின்புறமாக வந்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகளான மாணவிகளுக்கு வழி விட்டு காத்திருந்த வாகனங்களுடன் மோதியுள்ளது.
அதனால் கட்டுப்பாட்டை இழந்த பட்டா மற்றும் கன்ரர் என்பன பாதசாரிகள் கடவையை கடந்துகொண்டிருந்த மாணவிகள் மீது மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்துடன் மற்றைய மாணவி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








No comments