அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் , அரசியல் தலையீட்டினால் , தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் மட்ட தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , மற்றும் அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்துள்ளன.
அந்நிலையில், கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
விஜயத்தின் போது அங்கே பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து பொலிஸ் உயர் அதிகாரிகள் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் , அங்கு கடமையில் உள்ள ஒரு சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் , இடமாற்றம் செய்ய தீர்மானித்து , அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அந்நிலையில் அரசியல்வாதி ஒருவரின் தயவை பொறுப்பதிகாரி நாடியதை அடுத்து , அவரின் தலையீட்டினால் , பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை , குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கான்ஸ்டபிளுக்கும் பல தடவைகள் இடமாற்றம் வழங்கப்பட்ட போதிலும் , அவரும் ஏதோ ஒருவகையில் தனது இடமாற்ற உத்தரவை இரத்து செய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலையே தொடர்ந்து கடமையாற்றி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments