சிறுமியின் காதல் விவகாரத்தை அறிந்த சிறிய தந்தை மற்றும் தந்தை சிறுமியை தாக்கியதில் சிறுமி உயிரிழந்தள்ளார்.
கம்பளையில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் கம்பளை பகுதியை சேர்ந்த நிபுணி நுவந்திகா பண்டார (வயது 14) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுண்ட்டெம்பல் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமியின் காதல் விவகாரம் தொடர்பில் அறிந்து கொண்ட சிறிய தந்தை (சித்தப்பா) வீட்டில் வைத்து சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான சிறுமி வீட்டில் வலி தாங்காமல் , வலியில் துடித்து அழுதவண்ணம் இருந்துள்ளார். அதன் போது சிறுமியின் தந்தை மீள சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். அதனால் வலியில் மேலும் சிறுமி அழுதுள்ளார்.
அவ்வேளை சிறுமியின் தாய் , சிறிய தந்தை மற்றும் தந்தையின் தாக்குதலில் இருந்து சிறுமியை மீட்டுக்கொண்டு அயல் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அயல் வீட்டில் சிறிது நேரம் வலியால் அழுது கொண்டிருந்த சிறுமி , அங்கு மயக்கமடைந்துள்ளார். அதனை அடுத்து தாயார் , சிறுமியை கம்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் , சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சிறுமியின் தந்தை மற்றும் சிறிய தந்தை ஆகியோரை கைது செய்துள்ளனர்.
No comments