வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த சந்தேக நபர் நஞ்சருந்திய நிலையில் , வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் கடந்த புதன்கிழமை அப்பகுதியை சேர்ந்த சத்திய கலா (வயது 31) எனும் பெண் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , துப்பாக்கி பிரயோகம் செய்த நபர் , அப்பெண்ணின் மைத்துனர் எனவும் , தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வறுபுறுத்தி வந்த போது , அதற்கு குறித்த பெண் மறுப்பு தெரிவித்து வந்த நிலையிலையே , அப்பெண்ணை சுட்டுப்படுகொலை செய்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில், சிவகுமார் எனும் நபரை போலீசார் தேடி வந்த நிலையில் , இன்றைய தினம் நெடுங்கேணி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் மறைந்து இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.
பொலிசாரை கண்டதும் அந்நபர் தன்வசம் வைத்திருந்த நஞ்சினை அருந்தியுள்ளார். அதனை அடுத்து அந்நபரை அவ்விடத்தில் இருந்து மீட்ட பொலிஸார் குறித்த நபரை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
அதேவேளை குறித்த நபர் பதுங்கியிருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments