13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன் என புளொட் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டோம், என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு பொய் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா ? ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள் என தெரியவில்லை.
அதேநேரம் கஜேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள். யாரை முதலமைச்சராக முற்படுத்தவது என்பது தொடர்பில் கட்சிக்குள் போட்டி நிலை காணப்படுகின்றது.
அவ்வாறான நிலையில் ஏன் இவ்வாறு மக்களை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன் அத்தோடு அவர்களது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அதாவது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்கள்என்ன தீர்வினை முன் வைத்திருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா ? அவர்களுடைய தீர்வு ஒற்றையாட்சிக்குள் அமைகின்றது எனவே மக்களை இனியும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது மக்களுக்கு நன்கு விளங்கும் இவர்கள் பொய்யுரைக்கின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.
No comments