உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீ விபத்தில் புடவைக் கடைகளும் பிளாஸ்டிக் கடைகளும் பெருமளவில் அடங்குவதாகவும் இதனால் ஏற்பட்ட சொத்து இழப்பு பல இலட்சங்களை கடந்துள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ பற்றிய நேரத்தில் வேகமான காற்றும் வீசியதாலேயே இந்த கடைத் தொகுதி விரைவாக பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரும் பொது மக்களும் தீயணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தீயை விரைவாக கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடைகள் அனைத்தும் தகரக் கொட்டிகளாலேயே அமைக்கப்பட்டிருந்தன. இதனாலேயே, தீ வேகமாகப் பரவியுள்ளதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் யாராவது தீ வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் உடபுஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments