Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

துயிலட்டும் அவள் அமைதியுடன் - நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் அமரர் தில்காந்திக்கு சமர்ப்பணம்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால்  பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு  வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு சமர்ப்பணம்செய்யப்பட்டிருக்கிறது.


மொணராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி  நவரத்னம் தில்காந்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் கல்விகற்று ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அண்மையில் நோயுற்றநிலையில் இயற்கையெய்தியிருந்தார். 

அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில்  “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு விழா நாளை, நாளை மறுதினம் மற்றும்  05ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

 யாழ்ப்பாணப் பல்கலைககழகதத்தின் பட்டமளிப்பு விழாவின் போது கடந்த நான்கு ஆண்டுகளாக “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” வழங்கப்பட்டுவருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் கற்றுக்கொண்டு, ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.

இதன்மூலம்  அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் நான்காவது வருடமாக தற்போது வழங்கப்படவுள்ளது.

  2019 ஆம் ஆண்டு முதலாவது தக்கப்பதக்கத்தினை  யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் 2020 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஸ் விஜயதர்சினியும் 2021 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணியும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆண்டுக்கான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை மொணராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நவரத்னம் தில்காந்தி பெற்றுக்கொள்ளவிருந்த நிலையில் அவர் நோயின்காரணமாக இயற்கையெய்தியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இத் தங்கப்பதக்கம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.

செல்வி நவரத்னம் தில்காந்தி குறித்து அவரோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையில் கல்விகற்ற நண்பர்களால் வெளியிடப்பட்ட நினைவுப் பகிர்வு,

அவளது பெயர் நவரத்னம் தில்காந்தி. அவளது சொந்த ஊர் மொணராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமம். அவளது பெற்றோர் சிறுகடை வியாபாரிகள். ஆரம்பக் கல்வி தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரை மொ/ஸ்ரீ கௌரி தமிழ் வித்தியாலயத்திலும், க.பொ.த உயர்தரத்தை மொ/ விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றாள்.

உயர் தரத்தில் 2A, B ஐ பெற்றுக் கொண்ட அவள், தனது முதல் பல்கலைக்கழகத் தெரிவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்தாள். அரசியல் விஞ்ஞானம் மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற அவள், இரண்டாம் வருடத்திலிருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக் கலையாக பயின்றாள். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வந்தவேளை, திடீரென இயற்கை எய்தினாள்.

தான் கற்ற பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அச்சம் ஆரம்பத்தில் அவள் மனதில் எழவே செய்தது. ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அந்த அச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்பு அவளுக்கு கிட்டியது.

செயன்முறைப் பயிற்சிகள் மற்றும் ஊடகத்துறை ( வானொலி, தொலைக்காட்சி) மீது கொண்ட ஆர்வமே தன்னை தொடர்ந்து ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியதாக அடிக்கடி கூறுவாள்.

முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்து கோட்பாட்டு ரீதியாக கற்ற அவள், இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியாக கற்றலில் ஈடுபட்டாள். சஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழில்சார் பயிற்சி என்பன ஊடகக் கற்கைகள் துறையால் அவளுக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் என்றே கூற வேண்டும்.

ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழில்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன அவளுக்கான ஊக்கத்தை மேலும் அதிகரித்தது.

பாடத் திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் அவளுக்கு கிட்டியது.  இதனூடாகவே ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அவளிடத்தே அதிகமானது.

ஊடகத் துறையில் வானொலி, தொலைக்காட்சி சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அவளுடைய அவாவாக இருந்தது. இருந்தாலும், பல கனவுகளுடன் வந்த அவள் உயரம் தொடுவாள் எனத் தெரியும் - ஆனால் இவ்வளவு தூரம் செல்வாள் எனத் தெரியாது.  

“கனவாகவே வந்து எங்கள் காவியமான தேவதை உறங்கச் சென்று விட்டாள்..! துயிலட்டும் அவள் அமைதியுடன்..!”

கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் அவளது கனவுகளை செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் கலாநிதி. சி. ரகுராம் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான திரு. யூட் தினேஸ் கொடுதோர், திருமதி. பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் அனுதர்ஷி கபிலன் ஆகியோருக்கும் மற்றும் அவளது கல்விக்கு உற்ற துணையாக இருந்த அவளது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை அவளுக்களித்துக் கௌரவித்த “நிலா நிதியம் குழுவினருக்கும்” அவளது நண்பர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

No comments