இருவரை சுட்டுப்படுகொலை செய்த பின்னர் , அவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக சம்பவத்தை முற்றாக மூடி மறைக்க முற்பட்டமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹம்பாந்தோட்டை மாமடல பகுதியில் இரண்டு மாடுகளை ஒருவரிடம் கொள்வனவு செய்து செல்ல இருவர் சென்றுள்ளனர்.
அதன் போது , மாட்டு உரிமையாளருக்கும் , மாடு வாங்க சென்ற இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் திடீரென மாட்டின் உரிமையாளர் , மாடு வாங்க வந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இருவரையும் , வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளனர் என அங்குனகொலபெலஸ்ஸ வைத்திய சாலையில் அனுமதித்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
வைத்திய சாலையில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர் என வைத்தியர்கள் அறிக்கையிட்ட பின்னர் , இருவரது சடலங்களையும் உடல்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது , இருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்தனர் என கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments