கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது , வன்முறையாளர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கடமை நேர துப்பாக்கியை கொள்ளையடித்து சென்றுள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற்போது விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் குறித்த துப்பாக்கி இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இந் நிலையில் விசாரணைகளில் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி , கொழும்பு 10, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் – பஞ்சிகாவத்தை பகுதியில் வைத்து உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தி, அதற்கு தீ வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் சிஐடி எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அச்சம்பவம் தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி மருதானை பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரிலிருந்து கழற்றி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் உதிரிப் பாகம் ஒன்றை ( வைபர் )சி.ஐ.டி.யினர் கைப்பற்றியிருந்தனர்.
No comments