முல்லைத்தீவு மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விலை கட்டுப்பாட்டு பிரிவினருக்கு தகவல் கிடைத்த நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் குறித்த இடத்திற்குச் சென்ற விலைக்கட்டுப்பாட்டு பிரிவு முல்லைத்தீவு மாவட்ட இணைப்பதிகாரி கே.ரி.வசந்தசேகரன் தலைமையிலான அணியினர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 900 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த 900 லீற்றர் மண்ணெண்ணெயினை குறித்த பகுதிக்கு வருகை தந்த மக்களுக்கு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு ஏற்ற வகையிலே ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வதாகவும் சிலர் எரிபொருட்களை இரவு நேரங்களில் பெற்றுக்கொண்டு அதிகூடிய விலையில் விற்பனை செய்வதாகவும் மக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில் இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருந்தொகை மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments