தலைக்கவசம் அணியாது சென்றவர்களுடன் பொலிஸாருக்கு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டமையால் 16 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பாலமுனை வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள பொலிஸ் காவலரணில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த காவலரண் ஊடாக தலைக்கவசம் இன்றி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்களை மறித்து பொலிஸார் தலைக்கவசம் தொடர்பில் விசாரித்த போது , பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நிலையில் பொதுமக்களும் அவ்விடத்தில் பெருமளவில் குவிந்து பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். அதனால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலதிக பொலிஸாரும் , ஊடகவியலாளர்களும் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு நிலைமை மிக மோசமாகி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதில் பொலிஸார் , ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 16 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினையும் மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments