இமதுவ பிரதேச சபை தவிசாளர் ஏ.வி.சரத் குமார மக்களின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இமதுவ பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீது நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு , வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.
அதன் போது வீட்டில் இருந்த தவிசாளரும் தாக்கப்பட்டார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த தவிசாளர் , வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தரும் உயிரிழப்பு
அலரி மாளிகை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது , காயமடைந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்து, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போராட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழப்பு.
கோட்டோ கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் அரச ஆதரவு வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
எம்.பி உயிரிழப்பு
நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மக்களிடம் சிக்கிக்கொண்ட பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வீரகெடியவில் இருவர் உயிரிழப்பு
வீரகெடிய பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். 08 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பு வைத்திய சாலையில் 218 பேர் காயங்களுடன்.
நேற்றைய வன்முறை சம்வங்களினால், 231 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 5 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments