தனது மகளை சித்திரவதை செய்து, அதனை வீடியோவாக எடுத்து தனது மனைவிக்கு அனுப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் பாட்டி சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (18) மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபர் தன்னுடைய 4 வயதும் 11 மாத வயதுடைய சிறுமியை சித்திரவதை செய்து, கொடூரமாக தாக்கி அதனை வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்ச்சியான வாக்குவாதங்கள் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் குறித்த தனது மகளான சிறுமியை தனது தாயாரிடம் (பாட்டி) ஒப்படைத்துவிட்டு சிறுமியின் தாயார் வெளிநாடு சென்றுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சந்தேக நபரான சிறுமியின் தந்தை சிறுமியின் பாட்டியிடம் இருந்து சிறுமியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார்.
தனது வீட்டில் வைத்து , சிறுமியை சித்ரவதை செய்து அதனை வீடியோ பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியுள்ளார். அது தொடர்பில் சிறுமியின் தாய் தனது தாயாரிடம் கூறியதை அடுத்து , சிறுமியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ள பொலிஸார், சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்து உள்ளனர்.
No comments