நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் அழையா விருந்தாளிகளாக சென்று உணவு அருந்த முற்பட்ட 5 சிறுவர்களை நகர பிதா பலர் முன்னிலையில் முழங்காலிட உத்தரவிட்டு , அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
வெலகம நகர சபை மண்டபத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அதன் போது , அப்பகுதியில் வசிக்கும் 12 முதல் 17 வயது வரையிலான 5 சிறுவர்கள் மண்டபத்திற்கு சென்று உணவு அருந்த முற்பட்டுள்ளனர்.
அதனை அவதானித்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் , அது தொடர்பில் நகர சபை தலைவரிடம் முறையிட்டுள்ளார். அவர் சிறுவர்களை பிடித்து , மண்டபத்தில் நிகழ்வுக்கு வந்த பலர் முன்னிலையில் முழங்காலிட பணித்துள்ளார். பின்னர் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் அங்கு வந்து சிறுவர்களை பொறுப்பெடுக்கும் வரையில் சுமார் 2 மணி நேரம் சிறுவர்களை முழங்காலில் இருத்தி வைத்துள்ளனர்.
பொலிஸார் ஐந்து சிறுவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பெற்றோரை வரவழைத்து , சிறுவர்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் விருந்தொன்றில் உணவு உட்கொள்ள வந்த சிறுவர்களை பலர் முன்னிலையில் முழங்காலிட வைத்து துன்புறுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்த நகர சபை தலைவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை பலர் முன் வைத்து வரும் நிலையில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
No comments