பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது.
அதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சாகல ரத்னாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம்.
இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என கேட்டேன்.
மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன்.
தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கேட்டு இருந்தார். பொலிஸ் பதிவு பற்றி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்தார்.
அத்துடன் ,நேற்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாக ஐனாதிபதி எம்மிடம் தெரிவித்தார்.
அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஆகியோரும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றி சாதகமாக கருத்து பகிர்ந்தனர்.
இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளாக (Confidence Building Measures) கருதப்படும் என நான் ஜனாதிபதியிடம் கூறி, இவற்றை தொடர்ந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.
அரகல கிளர்ச்சி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை தொடர்பில் கைதாகி உள்ளோர் தொடர்பில் தயக்கம் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் அரசு தரப்பினர் கருத்துகளில் இருந்து தெரிய வந்தது.
அவர்களையும் விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையாவது இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால், தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.
ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் பிரச்சினை விசேடமாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சாதகமான எண்ணப்பாடு இன்று நிலவுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சாகல ரத்னாயக்க ஆகியோரும் கூறினர்.
மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.
பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 விகித உணவின்மை பிரச்சினையும், இதையடுத்தே, நகரங்களில் 43 விகிதமும், கிராமங்களில் 34 விகிதமும் உணவு பாதுகாப்பின்மை இருப்பதாக ஐநா நிறுவனங்கள் கண்டறிந்து கூறி இருப்பதை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க விசேட ஒதுக்கீட்டு திட்டம் ஒன்றையும், அவற்றை ஆராய ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்கவும் கோரினேன் என்றார்.
No comments