மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் தனக்கு உணவளித்து வந்தவரின் மரண சடங்கொன்றில் குரங்கு ஒன்று சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதி கிரியை நடந்த மயானத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் (வயது 56) என்பவர் காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு உணவு வழங்கி வந்துள்ளார்.
குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கற்களை வழங்குவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துதையடுத்து அவரின் வீட்டில் இறுதிகிரிகைகள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்வதற்கு உறவினர்கள் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து கொண்டு வந்து வைத்த போது அங்கு வந்த குரங்கு அவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா என சோதித்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்தது.
ஆனால் அவர் படுக்கையில் இருந்து எழும்பாததையடுத்து குரங்கு கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்தமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது.
அதேவேளை சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு சென்ற நிலையில் குரங்கு அங்கு சென்று தனக்கு உணவு தந்தவர்க்கு நன்றி உணர்வுடன் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது.
No comments