மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த உடனடியாக தேர்தல்கள் நடத்தப்பட்ட வேண்டும். ஆனால் ஜனாதிபதி அனைத்து தேர்தல்களையும் ஒத்திவைக்கவே விரும்புகின்றார். இதனால் மக்களுக்கான ஜனநாயக முறை மறுக்கப்பட்டுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் பல தரப்பினராலும் முன் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் உள்ளூராட்சி சபைகளின் காலங்கள் முடிவடையவுள்ளமையால் அவையும் கலைக்கப்படவுள்ளன.
உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டாலும் உடனடியாக தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.
கடந்த உள்ளூராட்சி தேர்தல் மூலம் 8 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை 4 ஆயிரமாக குறைக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை மாகாண சபை தேர்தல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படவில்லை. மாகாண சபை தேர்தல் பழைய முறையில் நடத்துவதா? இல்லையா? என குழப்பம் நீடிக்கிறது
எனவே நாடளுமன்ற தேர்தல் , மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் திருத்தம் தேவை. இவ்வாறான சூழலில் தற்போது தேர்தலை நடத்த அரசாங்கம் தயார் இல்லை.
அதேவேளை எந்த தேர்தலை எதிர்கொண்டாலும் பெரமுன கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகள் என்பன நிச்சயம் தோல்வியை தழுவும் நிலைமையே தற்போதுள்ளது.
பெரமுன பல உள்ளூராட்சி சபைகளை ஆளுவதனாலும், நாடாளுமன்றிலும் அவர்கள் பெரும்பானமையாக உள்ளதனாலும் அதனை தொடர்ந்து நிலை நிறுத்த உள்ளனர்.
இதனால் மக்களுக்கான ஜனநாயக முறை மறுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல் கடந்த 4 வருடமாக நடக்கவில்லை. உள்ளூராட்சி சபைகளின் காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதுவும் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றம் தோல்வியடைந்த நாடாளுமன்றம். ஆகவே அது உடனடியாக கலைக்கப்பட்ட வேண்டும். கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்த வேண்டும். அத்துடன் மாகாண சபை தேர்தலையும் நடாத்த வேண்டும். இதனையே மக்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் ஜனாதிபதி அனைத்து தேர்தல்களையும் ஒத்திவைக்கவே விரும்புகின்றார். என தெரிவித்தார்.
No comments