வலிகாமம் வடக்கு, தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/247 தையிட்டி கிழக்கு வள்ளுவர் புரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள திருவள்ளுவர் சனசமூக நிலையத்தினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பகுதியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பின் வலி வடக்கு பிரதேசமானது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், வள்ளுவர் புரம் பகுதியில் காணப்பட்ட திருவள்ளுவர் சிலை அழிவடைந்திருந்தது.
அழிக்கப்பட்ட சிலை இருந்த இடத்தில் கிராம மக்களின் நிதி பங்களிப்பில் 7 இலட்ச ரூபாய் பெறுமதியில் கருங்கல்லினால் நிறுவப்பட்ட 4 அடி உயரமான புதிய திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
குறித்த நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் வலி வடக்கு மீள் குடியேற்ற சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments