யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணை குறிக்கப்பட்ட கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக விநியோகக்கபட்டு வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்தார்.
அத்தோடு விவசாயிகள் நீர்ப்பம்பி ஊடான நீர் இறைப்புக்கும் , தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் மண்ணெண்ணை போதாமை உள்ளதாக கோரிக்கை முன்வைத்தனர்.
அது தொடர்பாக கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட செயலர் கூறினாா்.
அதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு, நெற் செய்கையில் பொட்டாசியம் குறைபாடு அது தொடர்பான விவசாயிகளுக்கான பயிற்சிகள், பாடசாலைகளில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், நெற் செய்கைக்கைக்கான திரவ உர விநியோகம், சேதனப்பசளை விநியோகம், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகம், உருளைக்கிழங்கு செய்கை பாதிப்பு ,விதை உற்பத்தி மற்றும் அடிப்படை விதைகளை வழங்குதல், விவசாயிகளுக்கான காப்புறுதி நடவடிக்கைகள், முட்டை உற்பத்தி, விலங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விதை அபிவிருத்திப் பிரிவினரால் 2022 ஆம் ஆண்டுக்கான யாழ். மாவட்ட சிறந்த விதை உற்பத்தியாளர்களுக்கான சான்றிதழ்களும் மாவட்ட செயலரினால் வழங்கி வைக்கப்பட்டது.
No comments