Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


வவுனியா வெடுக்குநாரி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட  சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாரி மலையிலிருந்த திருவுருவ சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமர்பணங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான்,  வெடுக்குநாரி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்ரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகள் மீள பிரதிஸ்டை செய்யப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு  நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெடுக்குநாரி மலையிலிருந்த விக்கிரகங்கள் சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதை துரிதப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

No comments