13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் எஸ். குகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 37 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், பல கட்சிகள் ஒன்றிணைந்து குத்துவிளக்கு சின்னத்தில் கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.
தமிழரசு கட்சியினர் நினைத்தார்கள் ரெலோ, புளொட் கட்சிகள் என்ன செய்தாலும் இலங்கை தமிழரசு கட்சியை விட்டுவெளியே போக மாட்டார்கள் என்று, ஆனால் திடீரென்று தமிழரசு கட்சியினை விட்டு வெளியே வந்து, குத்துவிளக்கு சின்னத்தில் ஒன்றிணைந்து விட்டார்கள்.
குத்துவிளக்கு சின்னத்தை ஆரம்பிக்கும் போது, பயன்படுத்திய அரசியல் ராஜ தந்திரத்தை தமிழர் உரிமைகளை பெறுவதற்கும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உங்களுடைய பதவிகளை தக்க வைப்பதற்காக, பயன்படுத்தும் ராஜதந்திரங்களை தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கும், பயன்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் சார்பில் நான் கோரிக்கை விடுகின்றேன்.
மாகாண சபையினை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என அனைவரும் சிந்திக்க வேண்டும். பௌத்த மயமாக்கள் என்பது ஒரு பிரச்சனைக்குரிய விடயம் தான் அதனை நிறுத்த தான் வேண்டும். அதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிகள் எங்களிடம் இருக்கும் போது, அதை தவிர்த்து பௌத்த மயமாக்கல் நடக்குது என கத்திக் கொண்டிருக்கின்றோம்.
இருப்பதை வைத்துக் கொண்டு, எமக்கு வருகின்ற ஆபத்துக்களை எவ்வாறு தவிர்த்து கொள்ள முடியும், என சிந்திப்பதை விடுத்து வேறு விதத்தில் நாங்கள் கத்திக் கொண்டிருக்கின்றோம்.
எந்த வகையிலும் அந்த விடயங்கள் தமிழ் மக்களுக்கு உதவாது. நடக்கக்கூடிய விடயங்களை நாங்கள் சிந்திக்க வேண்டும்.
ஜனாதிபதி 13வது திருத்தசட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று கூறுகின்றார். எனவே அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும்.
புதிய அரசியல் யாப்பு என்பது இப்போதைக்கு சாத்தியமற்ற விடயம். எனவே ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற ஒரு விடயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமைப் பட வேண்டும்.
மாகாண சபை என்பதுதான் எமது தீர்வுக்குரிய ஒரு துரும்பு,பௌத்த மய மாக்கல் மற்றும் தமிழரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபை உறுதுணையாக இருக்குமாக இருந்தால், அதனைப் பாதுகாப்பதற்கு கட்சிகள் ஒற்றுமையாக முயற்சிக்க வேண்டும் என்றார்.
No comments