பல தடவைகள் கடவத்தை மற்றும் பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு அருகில் மின்கம்பிகள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வத்தளை, பரணவத்த பிரதேசத்தில் வசிக்கும் 32 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி மஹாபாகே பராக்கிரம வீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவர்கள் பல தடவைகள் நெடுஞ்சாலைகளில் உள்ள மின்கம்பிகளை அறுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
2023 பெப்ரவரி மாதம் 02, மே 01, மற்றும் ஒக்டோபர் 21ஆம் ஆகிய திகதிகளில், சந்தேக நபர்கள் மின் கம்பிகளை அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் கொள்ளையிட்ட முச்சக்கரவண்டியையும் இதற்கு பயன்படுத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகளில் உள்ள மின் கம்பிகளை கொள்ளையிட்டு அவற்றிலிருந்து செப்பினை விற்பன செய்து போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இவர்கள் இதற்கு முன்னரும் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் இருவரிடமும் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் கொள்ளையிட்ட நெடுஞ்சாலை மின் கம்பிகளின் ஒரு பகுதியையும் பொலிஸார் கைப்பற்றினர்.
No comments