200 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டு, அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது 6 மதுபான உற்பத்திசாலைக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலை இலக்காக் கொண்டு பணம் சேகரிப்பதான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு தான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை.
சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன். இந்த சட்டவிரோத உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
No comments