பொது தேர்தலை இலக்கு வைத்தே , ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் என்ற கோஷத்துடன் உதிரிகளாக உள்ளவர்கள் ஒன்றிணைய முனைகிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தன் மூலம் , நாட்டின் நலன் மக்களின் நலன் மற்றும் பொருளாதார நலன் என்பவற்றிலிருந்து விலகி தமது கொள்கையற்ற கோட்பாடற்ற அரசியல் இலக்கற்ற உதிரிகளை தமிழ் பொது வேட்பாளர் என்ற போர்வையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்குவைத்தே இவர்களுடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரை இந்த நாட்டின் விகிதாசார நிலையை கருத்தில் எடுப்போமாயின் பெரும்பான்மை இனமாக உள்ள தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் தான் ஜனாதிபதியாக வர வாய்ப்பள்ளது. இது ஒன்றும் இரகசியமானதல்ல
எனவே தான் ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விரமசிங்க அவர்களே நாட்டை வழிநடத்தி செல்லக்கூடிய தகைமை உள்ளவர் என்பதை நாம் மிகத் தெளிவாக கூறிவருகின்றோம்.
இதேவேளை சிங்கள தலைவர்களும் வெளிநாடுகளும் எமது பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கு பொதுபேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளோம். என சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தானது விசித்திரமாக உள்ளது.
தரப்படுத்தலுக்கு எதிராக போராடி உயிர் நீத்த பொன் சிவகுமாரன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நடந்த அனைத்தும் சிங்களத் தலைவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ தெரியாதென அவர் கருதுகின்றார் போலும்.
2002 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் கண்காணிப்பாளர்களாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தென்னிலங்கையிலும் நிலைகொண்டிருந்தனர். அதில் நோர்வேயின் மத்தியஸ்தமும் இருந்தது.
இவ்வாறிருக்க வெளிநாட்டவருக்கு எமது பிரச்சினையை காண்பிப்பதற்கு பொதுவேட்பாளர் என்ற பேச்சு தமது அஸ்தமித்துப்போகும் தமது அரசியல் இருப்ப தக்கவைப்பதற்கான ஒரு பிரயத்தனமே தவிர இதனால் தமிழ் மக்களுக்க எவ்விதமான பயனும் இல்லை.
ஆகவே பொது வேட்பாளர் என்ற கருத்தானது பிரிந்திருக்கும் உதிரிகளை ஒன்றிணைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு செயற்பாடாகவே ஈ.பி.டி.பி கருதுகின்றது. என தெரிவித்துள்ளார்.
No comments