உட்கட்சி அதிகார மமதையில் இருப்பவர்களின் நலன்களுக்காக தமிழ் மக்களின் வாக்குகள் சிதறக்கூடாது. அதேநேரம் அதிகாரப் போட்டியில் அவசரமாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சில கட்சிகள் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னரே தத்தமது கட்சிகளின் நிலைப்பாட்டை வெளியிடுவதாக கூறியிருந்தார்கள்.
தற்போது பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்துள்ள சூழலில் தமிழ் மக்களின் அரசியல் நலன்சார்ந்த எவ்விதமான திட்டங்களும் உள்ளடக்கப்படாத வேட்பாளர்களுக்கு எழுந்தமானமாக தத்தமது அதிகாரத்தை நிலைநிறுத்தும் போட்டியில் தீர்மானங்களை அறிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால் தமிழ் மக்களது அரசியல் உரிமை தொடர்பாக எந்தவிதமான கரிசனைகளையும் இக்கட்சிகள் கொண்டிருக்கவில்லை என்பதும் தமது கட்சியை யார் ஆதிக்கப்படுத்துவது என்ற கோதாவில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்ட இவர்களால் தமிழ் மக்களது வாக்குகள் சிதறக்கூடாது என்பதே எமது நோக்கமாக உள்ளது.
எனவேதான தபால்மூல வாக்களிப்பும் இடம்பெறவுள்ள சூழலில் கல்வியாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் கடந்தகால அரசியல் நிலைமைகளை அனுபவரீதியாக கண்டவர்கள்.
எனவே எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்துமாறு கேட்டக்கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.
No comments