மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் சந்திவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த ச.இன்பராசா என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வாகனங்களில் கட்சி ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் குறித்த இளைஞனும் ஒருவர். மக்களை சோதனையிட்டு மைதானத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்த வேளை குறித்த இளைஞனின் உடைமையில் துப்பாக்கி ரவை ஒன்று காணப்பட்டமையை அடுத்து அங்கு கடமையில் இருந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளார்.
No comments