கிளிநொச்சி மாவட்ட மக்கள் போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும். பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் இம்மாவட்ட பெண்களாகிய நீங்கள் உங்கள் குடும்பங்களிலிருந்து எமது கட்சியின் கொள்கை மற்றும் வழிநடத்தலை ஏற்று தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த செயலார் நாயகம்,
கிளிநொச்சி மாவட்டம் என்பது பல்வேறு அழிவு யுத்தத்தை அதிகளவு பாதிப்புகளை கண்ட மாவட்டமாகும். அதேபோன்று இங்குவாழும் மக்களும் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்தவர்கள்.
ஆனால் தற்போது அந்த நிலை மாற்றம் கண்டுவருகின்றது. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு எமது கட்சி பல்வேறு வழிகளில் அபிவிருத்தியையும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
இதற்கு இன்றைய கிளிநொச்சி நகரமே சாட்சி சொல்லும்.
இதேநேரம் தற்போது இதுவரைகாலமும் தம்மை போலித் தேசியவாதம் ஏமாற்றிவந்துள்ளது என்பதையும் இம்மாவட்ட மக்கள் இனங்கண்டு அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
இந்த மாற்றம் இம்முறை ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கின்றது. இந்த மாற்றம் உங்கள் உறவுகள், உங்கள் கிராமங்கள், உங்கள் பிரதேசங்கள் என பரவலாக விரிவடைவதனூடாகவே முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்துடன் அந்த மாற்றத்தை உங்களால் எற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
இதேநேரம் தமிழ் அரசியல் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுள் மக்கள் நலனையும் மக்கள் மீதான அக்கறையையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் ஒருங்கிணைத்து சிறந்த பொறிமுறையுடன் அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆரம்பம்முதல் இன்றுவரை தனது சேவைகளை முன்னெடுத்தவரும் ஒரே கட்சியாக ஈ.பி.டி.பியே இருந்து வருகின்றது.
இதனால்தான் எம்மை நம்பி எமது பாதையில் அணிதிரளுமாறு நாம் தமிழ் மக்களை கோரிவருகின்றோம். ஆனாலும் இதுவரை அது நடைபெறாதிருப்பது கவலைக்குரியதாகும்.
இதேநேரம் எமது கடந்தகால நாம் முன்னெடுத்த மக்கள் நலத்திட்டங்களை சேவைகள் போன்றவற்றை மனதில் நிறுத்தி கட்சியின் வேலைத்திட்டங்களை புதிய உத்வேகத்தடன் ஒவ்வொரு குடிமகனது செவிகளுக்கும் கொண்டுசெல்வதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்படன் செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
அத்துடன் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு கட்சி என்ற ரீதியில் அதற்கு நாமே பொறுப்பாக இருப்போம். அதனடிப்படையில் உங்கள், உங்கள் உறவுகள். உங்கள் கிராம மக்களது வாக்குகளை எமது வீணைச் சின்னத்துக்கு அளிப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தங்கள் என மேலும் தெரிவித்தார்.
No comments