Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் காணி பிணக்குகளை தீர்க்க விசேட ஆணைக்குழு


வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர்,  ஆளுநரின் செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும்  மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

 ஏழை மக்களுக்கு உரிய காணிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காணி வழங்குவதில் இடம்பெறும்  முறை கேடுகள் அநீதிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.அதற்குரிய பொறுப்பு அலுவலர்கள், தொடர்ந்தும் தவறு செய்யும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். 

சில மாவட்டங்களில்   மட்டுமே  காணி  அலுவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் காணி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக உள்ளதால் அங்கு விசேட கவனம் எடுக்க வேண்டும். 

காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க வேண்டும் 

பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் நாங்கள் உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு அரச உத்தியோகத்தார்கள் சேவையாற்ற வேண்டும். மிக விரைவாகவும் அன்பானதாகவும் தரமானதாகவும் சேவைகளை வழங்குதல் வேண்டும், 

அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் குறித்த காரணத்தை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தாமல் மக்களை மீண்டும் மீண்டும் அலுவலகங்களுக்கு வரவழைக்கக் கூடாது. சில அலுவலர்கள் நடைமுறைப்படுத்தக்  கூடிய விடயங்களை செய்யாமலும் நடைமுறைப்படுத்தக் கூடாத விடயங்களை செய்கின்றனர் 

  அவ்வாறானவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்க பெறுகின்றது. அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

 அரச அலுவலர்கள் சரியானவர்களை தேர்வு செய்து காணிகளை வழங்காமை மக்களுக்கு செய்கின்ற துரோகம் என மேலும் தெரிவித்தார். 

அதே வேளை பொதுமக்கள் சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு வருகின்றனர், அவ்வாறான பிரச்சனைகளை தமது பிரதேசத்தில் உள்ள உரிய அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

No comments