மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதை சிறந்ததொரு முன்னுதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும், யாழ்ப்பாண பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளிகள் பலர் எங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களில் ஒருவர்கூட தமக்கு நிவாரணம் தேவை என்று கேட்டதில்லை. உடலில்ல எந்தக் குறைபாடுகளும் இல்லாதவர்கள் நிவாரணம் தேவை, அது தேவை, இது தேவை என்று நாடும்போதும் அவர்கள் அப்படி எங்களை நாடியதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று சாதிக்கவே விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்தவேண்டும்.
அவர்களிடம் கடின உழைப்பு இருக்கின்றது. மாற்றாறல் உடையவர்கள் அரச அலுவலகங்களை அணுகும் வசதியை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு, பிரதேச செயலர் சா.சுதர்சன் அவர்களால் நினைவுப்பரிசில் வழங்கப்பட்டது.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் ஆக்கங்களை உள்ளடக்கிய புதுப்பிரவாகம் நூல் வெளியிடப்பட்டதுடன், அது கண்பார்வையற்றவர்கள் வாசிக்கக் கூடிய வகையிலும் பிரெய்லி வடிவிலும், ஒலி வடிவிலும் வெளியீடு செய்யப்பட்டது.





.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



No comments