ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியின் ஆலோசகர் பட்டிரிக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினர், ஐ.ஓ.எம். நிறுவனத்தினர், யு.என். ஹபிட்டாட் நிறுவனத்தினர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி நில அளவையாளர் நாயகம், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட ஆளுநர்,
ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2 ஆண்டுகளில், வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணியுடன் தொடர்புடைய முக்கிய சவால்களைத் தீர்ப்பதற்கும், அதற்குப் போதுமான முக்கியத்துவமுள்ள வகையில், அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இடையிலான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்குமான திட்டமாக இது அமைகின்றது.
இத்திட்டம், இலங்கையின் நீண்டகாலப் போர் பின்னணியில் காணிக்கான சம அளவிலான அணுகல் இல்லாமை தொடர்ச்சியான முரண்பாடுகளுக்கான மூலக்காரணமாக இருந்து வந்ததையும், மக்களின் இடம்பெயர்வு, மீளக்குடியமர்தல் மற்றும் சமூகங்களின் மீளிணைவு உள்ளிட்ட சிக்கல்களை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான இவ்வகை நம்பிக்கையின்மை நீண்டநாள் அமைதிக்குத் தடையாகவும், சமூக மாற்றத்துக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. இவை, ஒழுங்கற்ற கொள்கைகள், செயலாக்க வலுவிழப்புகள் மற்றும் நுட்பக்குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்தும் உருவாகின்றன.
இந்தச் சவால்கள் பலதரப்பட்டவையாக உள்ளன — தனிநபர் உரிமை விவகாரங்கள், இடம்பெயர்வின் தாக்கங்கள், சமூகங்களுக்கிடையிலான வளங்களுக்கான முரண்பாடுகள், இராணுவம் கைப்பற்றியுள்ள குடியேற்ற நிலங்கள், சமூக கலந்தாய்வின்றி பாதுகாப்பு அல்லது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் என வௌ;வேறு நிலைத்தன்மையற்ற சிக்கல்கள் உள்ளன.
இந்தச் சூழலில், இடம்பெயர்ந்தோர், அகதிகள், மீண்டுவருபவர்கள், குடும்பத் தலைவியரான பெண்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், இளையோர்கள் ஆகியோரது நுட்பமான நலன்கள் கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.
நில உரிமையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட தடைகள், பெண்களுக்கு சட்டப்படி உரிமைகள் இருப்பினும் நடைமுறையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்தத் திட்டம் இதனை முற்றாக உணர்ந்தும் கவனத்துடனும் செயல்படுகிறது.
அரசாங்க நிறுவனங்கள், மாகாண சபை, சிவில் சமூகம், சமூகத் தலைவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு காணிகளை விடுவித்தல், மீளக்குடியமர்தல், சமூக மீளிணக்கம் மற்றும் வீடு மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான நீடித்த, சமச்சீர் தீர்வுகளை வழங்கும் திறனுடன் செயல்படுதல் – இதன் மூலமாக எதிர்கால முரண்பாடுகளைத் தவிர்த்து, சமாதானத்தையும் சமூக நம்பிக்கையையும் கட்டியமைக்குதல் என இந்தத் திட்டத்தின் நோக்கம் தெளிவானது.
எனவே, இந்தத் திட்டத்தை எங்களால் முடிந்த அளவு நேர்த்தியான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள முடியும். இந்தத் திட்டம், நம்பிக்கையை மீட்டெடுத்து, காணி என்பது உறுதியான சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும், அனைத்து சமூகங்களுக்கும் ஒரு நிலைத்தமைப்பாக அமையும் வகையில் அமையவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர், யு.என். ஹபிட்டாட் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் திட்டம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணிப் பிரச்சினைகள் வேறு வேறானவை என மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் தற்போது அங்குள்ள காணிப் பிரச்சினைகள் எத்தகைய தன்மை வாய்ந்தவை அவற்றைத் தீர்ப்பதற்கு எவ்வாறான உதவிகளை இந்தத் திட்டத்தின் ஊடாக வழங்கலாம் என்பது தொடர்பிலும் மாவட்டச் செயலர்களும், மாகாண காணி ஆணையாளரும் குறிப்பிட்டனர்.
இதன்போது வடக்கின் 4 மாவட்டச் செயலர்களும், சூம் செயலி ஊடாக இணைந்த வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும் வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அந்தத் திணைக்களத்தின் முறைய வர்த்தமானியை மீளப்பெறுவது தொடர்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றபோதும் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை எனவும் விசனத்துடன் அதிகாரிகளும், ஆளுநரும் சுட்டிக்காட்டினர். அது முக்கிய பிரச்சினை என்றும் அதுவும் இந்தத் திட்டத்தின் ஊடாகவேனும் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தத் திட்டத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் தொடர் கலந்துரையாடல்கள் நடைபெறும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர் குறிப்பிட்டார்.
No comments