காணி விடுவிப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகமே தவிர அது ஒரு மக்கள் நலன் சார் விடயம் அல்ல என தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் தொழிலதிபர் சுலக்சன் அவரது சுயேச்சைக்குழுவின் பேச்சாளர் விஜயகாந்த், வேலணை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் சி.சிவநேசன்
ஆகியோர் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,
சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு யாழ் மாநகரம், கோப்பாய் பிரதேச சபை, வேலணை பிரதேச சபை உள்ளிட்ட சபைகளில் போட்டியிட வேட்புமனு செய்த போதும் யாழ் மாநகர வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஏனைய இரு சபைகளிலும் நாம் கோடரி சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
அதேநேரம் யாழ் மாநகரப் பகுதியில் எமது ஆதரவை நாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வழங்க முடிவுசெய்துள்ளோம்.
குறிப்பாக எமது பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம்.
இதேநேரம் காணி விடுவிப்பு என்றும், அதிகார தொனியில் மிரட்டியும் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குகளை அபகரிக்கவென்றே அரசியல் செய்யும் இந்த தேசிய மக்கள் சக்தியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
அந்தவகையில் மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு, இம்முறை காலச் சூழலுக்கேற்ப மக்கள் தமது வாக்குகளை செலுத்தி தமது வாழ்வியலை வளப்படுத்திக்கொள்வார்கள்என்று நம்புகின்றோம் என தெரிவித்தார்.
No comments