ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் UL 306 என்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்த 101 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவிலுள்ள மேடான் சர்வதேச விமான நிலையத்திற்கு UL 302 என்ற விசேட விமானம் புறப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை இதனை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, நேற்றைய தினம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தைப் பரிசோதித்த பின்னர், குறைபாட்டைச் சரிசெய்ய சில மணி நேரம் ஆகும் எனத் தெரிவித்ததால், பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்கவைக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மறுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர், இலங்கைத் தூதுவரின் தலையீட்டால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான ஶ்ரீலங்கன் விமானத்தைப் பரிசோதிக்க இன்று (06) காலை ஜகார்த்தாவுக்கு இலங்கை தொழில்நுட்பக் குழு ஒன்று புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments